Published : 06 Feb 2020 04:24 PM
Last Updated : 06 Feb 2020 04:24 PM

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அமைதித் திட்டம் குறித்து பாலஸ்தீன அதிபர் பேச முடிவு

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ட்ரம்ப்பின் அமைதித் திட்டம் குறித்து பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸி உரையாற்ற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதி ரியாத் மன்சூர் கூறும்போது, “பிப்ரவரி 10 ஆம் தேதி பாலஸ்தீன அதிபர் மெக்மூத் அப்பாஸ் நியூயார்க் செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ட்ரம்ப்பின் அமைதித் திட்டம் குறித்து உரையாற்ற இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு பாலஸ்தீனம் தரப்பில் வைக்கப்படும் தீர்வு குறித்து அவர் பேச இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால், இதனை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்தபோதே, பாலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல்

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x