Published : 05 Feb 2020 06:37 PM
Last Updated : 05 Feb 2020 06:37 PM
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள அமைதித் திட்டம் முட்டாள்தனமானது என்று ஈரான் மூத்த தலைவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் மூத்த மத தலைவர் அயத்துல்லா காமெனி கூறும்போது, “இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த அமைதித் திட்டம் முட்டாள்தனமானது. ட்ரம்ப் இதனை நிறைவேற்றுவதற்கு முன்னரே இது இறந்துவிடும். பாலஸ்தீனம் பாலஸ்தீனர்களுக்கே சொந்தமானது. இதில் முடிவு எடுக்க நீங்கள் யார்?” என்று கேட்டுள்ளார்.
முன்னதாக, கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இத்திட்டத்தை ''ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல'' என்று கூறி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார்.
கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.
தவறவீடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT