Published : 05 Feb 2020 05:40 PM
Last Updated : 05 Feb 2020 05:40 PM

ஆப்கானிஸ்தானில் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை; வீரர்களை அமெரிக்கா திரும்பப் பெறும்: ட்ரம்ப்

ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும்போது, “ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் அப்பாவிகள். சட்டம்- ஒழுங்கைச் சரி செய்வதற்காக மற்ற நாடுகளுக்குச் சேவை செய்வதும் எங்கள் நோக்கம் அல்ல.

எங்கள் வீரர்கள் சிறந்த போராளிகள். அவர்கள் உலகின் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்காகச் சண்டையிட வேண்டும். இல்லையென்றால் சண்டையே இடக்கூடாது. நாங்கள் அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வரச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் வீரர்கள் நாடு திரும்ப உள்ளனர்'' என்றார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோரைத் தொடர்புகொண்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x