சீன ராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட வுஹான் நகரம்

சீன ராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட வுஹான் நகரம்
Updated on
1 min read

சீனாவில் கரோனா வைரஸ் பரவிய வுஹான் நகரை சீன ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வுஹான் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், வுஹான் நகருக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் துன்பப்பட்டனர். இந்த நிலையில் வுஹான் நகரம் சீன ராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சீன ஊடகங்கள், “சீனாவில் கரோனா வைரஸ் பரவிய வுஹான் நகரம் தற்போது சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கான வேலையில் ராணுவம் இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 200க்கும் அதிகமான ராணுவ உயர் அதிகாரிகளுடன் 130 லாரிகள் வுஹான் நகரை அடைந்துள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 360க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in