

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் நாயின் மூலம் கரோனோ வைரஸிலிருந்து காப்பாற்றப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சீனாவிலுள்ள வுஹான் நகரத்திற்குச் செல்ல ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவரது செல்ல நாயான கிமி அவரது பாஸ்போர்ட்டைக் கடித்துக் குதறியது. இதனால் அவரது பாஸ்போர்ட் முற்றிலுமாகச் சேதமைடைந்ததால் அவரால் சீனாவுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் கடும் மனவருத்தத்தில் இருந்துள்ளார் அந்தப் பெண். இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களிலேயே வுஹான் நகரத்தில் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.
மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணத் தலைநகர் வூஹான். அந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களிலேயே அங்கு வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் தனது செல்ல நாய் தன்னுடைய பாஸ்போர்ட்டைக் கடித்துக் குதறியதன் மூலம் தான் ஒரு மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதை அந்தப் பெண்மணி உணர்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் பெண்மணியின் செல்ல நாய் கிமியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.