Published : 29 Jan 2020 03:04 PM
Last Updated : 29 Jan 2020 03:04 PM

ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல: ட்ரம்ப்பின் திட்டத்தை நிராகரித்த பாலஸ்தீன அதிபர்

ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல என்று கூறி ட்ரம்ப் வெளியிட்ட இஸ்ரேல் - பாலஸ்தீனம் அமைதி திட்டத்தை, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துவிட்டார்.

கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆனால், இதனை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து அப்பாஸ் கூறும்போது, “ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல. எங்களது உரிமைகளும் விற்பனைக்கு அல்ல என்பதை ட்ரம்ப்புக்குக் கூறிக் கொள்கிறேன். நாங்கள் மண்டியிடப் போவதில்லை. உங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்தபோதே, பாலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x