

இந்தியா, பிரேசில் இடையே 15 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26 ஆம் தேதி இந்தியக் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று 8 அமைச்சர்களுடன் இந்தியா வந்தடைந்த ஜெய்ர் போல்சோனரோவுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு ராணுவ அணிவகுப்புடன் அரசு மரியாதை வழங்கப்பட்டது. ஜெய்ர் போல்சோனரோவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் மோடி - ஜெய்ர் போல்சோனரோ சந்திப்பில் இரு நாடுகளிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து ஜெய்ர் போல்சோனரோ கூறும்போது, “இந்திய பயணத்தில் 15 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பது பிரேசில் வரலாற்றில் சாதனை.
இந்தியா - பிரேசில் இரு நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாகவே உள்ளது. இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து பயணித்தால் உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் மிக்க 10 நாடுகளில் ஒன்றாக இரு நாடுகளும் முன்னேறலாம்” என்றார்.
மேலும் இறுதியாக பேச்சை முடிக்கும்போது, “நான் இதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். நான் இந்தியாவிலிருந்து கிளம்ப இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. ஆனால் நான் இப்போதே இந்தியாவை மிஸ் செய்ய தொடங்கிவிட்டேன்” என்றார்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ இந்தியாவில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.