அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்: இராக்கில் நடந்த பிரம்மாண்டப் பேரணி

அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்: இராக்கில் நடந்த பிரம்மாண்டப் பேரணி
Updated on
1 min read

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வலியுறுத்தி போராட்டக்காரர்களால் பிரம்மாண்டப் பேரணி நடத்தப்பட்டது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில் , “இராக் தலைநகர் பாக்தாத்தில் அந்நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் திரளாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 'வேண்டாம் அமெரிக்கா', 'அமெரிக்காவுக்கு மரணம்', 'இஸ்ரேலுக்கு மரணம்' போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இராக்கில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தால் பாக்தாத் நகரமே அதிர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் ஆதில் அப்துல் மஹ்திக்கு எதிராக பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

இராக்கில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் கையில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் இராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in