Published : 21 Aug 2015 12:11 PM
Last Updated : 21 Aug 2015 12:11 PM

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

இலங்கை பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றார். அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்பு விழா கொழும்பில் நடைபெற்றது.

ரணில் பிரதமராவது இது 4-வது முறையாகும். முன்னதாக, 1993-1994 மற்றும் 2001-2004 ஆண்டுகளில் ரணில் (66) பிரதமராக பதவி வகித்தார்.

இதனை அடுத்து அவர் கடந்த ஜனவரி மாதம் 3வது முறையாக பிரதமராக நியமிக்கப்பட்டார். தற்போது 4–வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச பின்னடைவைச் சந்தித்தார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ரணில் கட்சி 106 இடங்களைப் பிடித்தது. பெரும்பான்மை பலத்தை பெற மேலும் 7 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், ரணில் ஆட்சி அமைக்க சிறிசேனாவின் சுதந்திர கட்சி ஆதரவு அளித்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் ரணில் தலைமையில் தேசிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x