Published : 23 Jan 2020 06:26 PM
Last Updated : 23 Jan 2020 06:26 PM
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இன அழிப்பைத் தடுக்குமாறு சர்வதேச நீதிமன்றம் மியான்மருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச நீதிமன்றம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ''ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இன அழிப்பைத் தடுப்பதற்கு அதிகாரத்திலுள்ள அனைத்தையும் செய்யுங்கள்” என்று மியான்மர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியின் வாதம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆங் சான் சூச்சி உலக அரசியலில் விமர்சிக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT