

ஈரானுடன் போர் ஏற்பட்டால் மோசானமான பின் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்துவரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சென்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அங்கு சென்ற நிலையில், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் சமீபத்தில் அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து இம்ரான் கான் ட்ரம்ப்பிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் இம்ரான் கான், ட்ரம்ப்பிடம் கூறுகையில், “ ஈரானுக்கும் மேற்கிந்திய நாடுகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டால் அது பேரழிவைத் தரும். இது உலகம் முழுவதும் வறுமையை ஏற்படுத்தும். அது எப்போது முடியும் என்று தெரியாது. எனவே, ஈரானுடன் போர் புரிவது பைத்தியக்காரத்தனம். ஆப்கானிஸ்தானிலேயே பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஈரானில் போர் புரிந்தால் அது மோசமான பின் விளைவுகளைத் தரும்” என்றார்.
முன்னதாக, இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.