Published : 22 Jan 2020 05:34 PM
Last Updated : 22 Jan 2020 05:34 PM

கிரெட்டா குறித்து பதில் கூற மறுத்த ட்ரம்ப்

காலநிலை மாற்றம் குறித்து ஸ்விட்சர்லாந்தில் நடந்த நிகழ்வில், கிரெட்டா துன்பர்க் குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

16 வயதான கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்களைக் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை மிகப் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகளால் அடையாளம் காணப்படார் கிரெட்டா துன்பர்க்.

வெள்ளிக்கிழமை தோறும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்குக் கொண்டு வருகிறார் கிரெட்டா.

இந்நிலையில், உலகப் பொருளாதார அமைப்பு ஸ்விட்சர்லாந்தில் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்ட கிரெட்டா துன்பர்க், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துப் பேசினார்.

இதே நிகழ்வில் அரசியல், பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் காலநிலை மாற்றம் குறித்து கிரெட்டா தெரிவித்த கருத்துகள் சரியா எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு ட்ரம்ப், ''நான் சுற்றுச்சூழலை நம்புகிறவன். சுற்றுச்சூழல் எனக்கு மிகவும் முக்கியமானது. நன்றி” என்று கிரெட்டாவை பற்றிக் கருத்து கூற மறுத்துவிட்டார்.

முன்னதாக, காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x