

கரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு வடகொரியா தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் சுற்றுலாதுறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ சீனாவிலிருந்து பரவும் சார்ஸ் வைரஸ் வகையான கரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இவ்வைரஸ் காரணமாக சீனாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சீனாவில் 300க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தாக்குதலால் சுவாசக் கோளாறு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது. முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இவ்வைரஸ் பரவும் தன்மை கொண்டது.
சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவியுள்ளது.