Published : 22 Jan 2020 12:24 PM
Last Updated : 22 Jan 2020 12:24 PM

சிரியாவில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 18 பேர் பலி

சிரியாவில் வடமேற்கு பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரியா கண்காணிப்பு குழு கூறும்போது, “சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகினர். மேலும் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் பொதுமக்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும்போது, ”கடவுள் நிச்சயம் அனைவரையும் பழிவாங்குவார். எனது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை” என்றார்.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும், சன்னி பிரிவு கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் அரசு, கிளர்ச்சிப் படைகள் என இருதரப்பினரும் மனித உரிமைகளை மீறி வருவதாக ஐ. நா. தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x