Published : 21 Jan 2020 02:35 PM
Last Updated : 21 Jan 2020 02:35 PM

65 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்

அமெரிக்காவில் 65 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

86 வயதான ஜாக்கும், 83 வயதான ஹாரியட்டும் 65 வருடங்களாக இணை பிரியா தம்பதியாக வாழ்ந்து வந்தனர். 1955 ஆம் ஆண்டில் முதன்முதலில் சந்தித்த இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் திருமண வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் ஹாரியட் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாரியட் இல்லத்தில் இல்லாததால், ஜாக் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் அவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் செயின்ட் லுயிஸில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஜாக் இறக்க, ஒரு சில மணி நேரத்தில் ஹாரியட்டும் இறந்தார். இறுதித் தருணத்தில் இருவரும் கைகளைப் பிடித்தபடி உயிரிழந்தனர்.

ஜாக், ஹாரியட்டின் மரணம் குறித்து அவர்களின் உறவினர் ஒருவர் கூறும்போது, “ நான் சோகமாக இருக்கிறேன். ஆனால். அவர்கள் அமைதியை அடைந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள். இது புத்தகங்களுக்கான உண்மையான காதல் கதை” என்றார்.

65 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த இந்த இணை மரணத்திலும் ஒன்றாக பயணித்துள்ளது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x