

இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்தமாட்டார்கள். மக்களின் வரிப்பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
அரச குடும்பத்திலிருந்து விலகிய முடிவு குறித்து ஹாரி தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார்.
அதில் ஹாரி கூறியதாவது:
“இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த முடிவை எனது மனைவிக்காகவே எடுத்தேன். அரச குடும்பத்திலிருந்து விலகும் இம்முடிவை நான் எளிதாக எடுக்கவில்லை.
இங்கிலாந்து எப்போதும் எனது தாய்நாடுதான். அதில் எப்போதும் மாற்றமில்லை. நான் எப்போதும் எனது பாட்டியை மதிப்பேன். கடந்த வாரங்களில் நீங்கள் எதனைப் படித்தீருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அதனால் என்னால் முடிந்த அளவுக்கு, இங்கிலாந்து இளவரசராக இல்லாமல் ஹாரியாக உண்மையை உங்களுக்கு விளக்கியுள்ளேன். ’’
இவ்வாறு ஹாரி தெரிவித்துள்ளார்.