

பாகிஸ்தானில் சுமார் 350 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 7 பேர் அடங்கிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் எடுத்த ஏராளமான ஆபாச பட சி.டி.க்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் பகுதியில் பல ஆண்டுகளாக இந்த ஆபாச படம் எடுக்கும் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களை வைத்து இவர்கள் படம் எடுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் பாகிஸ்தானில் இருந்துதான் அதிக அளவில் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்கள் வெளியாகின்றன. முக்கியமாக பாகிஸ்தானின் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள்தான் இந்த கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர்.
முதலில் சிறார்களுடன் நல்ல முறையில் பழகும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை தங்கள் விருப்பப்படி வீடியோ எடுத்துள்ளனர். பிறகு அவர்களை மிரட்டியும் பயன்படுத்தியுள்ளனர். சில இடங்களில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரை மிரட்டியும் இந்த கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.
இப்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் இந்த வீடியோக்களை மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பி பெருமளவில் பணம் சம்பாதித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இதன் பின்னணியில் உள்ள மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.