Published : 13 Jan 2020 10:43 AM
Last Updated : 13 Jan 2020 10:43 AM

சொந்த நாட்டிலேயே போராட்டக்காரர்களை கொல்லாதீர்கள்: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

அணுஆயுத சோதனைகள் வேண்டாம் என்றும் உங்கள் போராட்டக்காரர்களை கொல்லாதீர்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாயினர். பலியானவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவரகள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.

தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் ஈரான் வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரானில் அரசின் செயலை கண்டித்து போராட்டங்கள் டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது , “ ஈரான் மீது பொருளாதார தடை விதித்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்துவோம் என்று எங்கள் தேசிய ஆலோசகர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள் என்பதில் எனக்கு ]கவலை இல்லை அது முற்றிலும் அவர்களை சார்ந்த விஷயம் ஆனால் அணு ஆயுத சோதனைகள் வேண்டாம். அவர்களது போராட்டக்காரர்களை கொல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x