பதற்றத்தை தணிக்க பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஈரான், சவுதி பயணம்

பதற்றத்தை தணிக்க பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஈரான், சவுதி பயணம்
Updated on
1 min read

மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றம் குறித்தும் அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கவும் ஈரான் மற்றும் சவுதி நாடுகளுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பயணம் மேற் கொள்கிறார்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் தரப்பில், “பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரியாத்தில் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்தை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவுதியை தொடர்ந்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப்பையும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திக்க இருக்கிறார்.

ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in