Published : 11 Jan 2020 03:22 PM
Last Updated : 11 Jan 2020 03:22 PM
உக்ரைன் விமான விபத்து தொடர்பாக ஈரான் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ''காலம் நிச்சயம் பதில் செல்லும். உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான்'' என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாயினர். பலியானவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவரகள்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.
மேலும், ஈரானின் தாக்குதலில் உள் நோக்கம் ஏதும் இல்லை என்றும் மனிதத் தவறால் இந்த விமான விபத்து நடந்துள்ளதாகவும் இந்நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் ஈரான் வருத்தம் தெரிவித்தது.
மேலும், விமான விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் ஈரான் நடத்தும் விசாரணை குறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ''காலம் நிச்சயம் பதில் செல்லும். உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான். வெளிப்படைத் தன்மையையே சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT