Published : 19 Aug 2015 06:04 PM
Last Updated : 19 Aug 2015 06:04 PM
இந்திய-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெறவுள்ள நிலையில் காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா தலையீடு கோரியுள்ளது பாகிஸ்தான்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான், இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மற்றும் ஐ.நா. தலையீடு தேவை என்ற கோரிக்கையை எழுப்பியது.
பிரதேச ஒழுங்கமைப்புகள் மற்றும் சமகால உலக பாதுகாப்பு சவால்கள் குறித்த விவாதத்தில் பாகிஸ்தானின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி கூறும் பொது, “உலக அமைதி மற்றும் வளமான வாழ்வுக்கு 57 உறுப்பினர்கள் கொண்ட இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பும் பங்களிப்பு செய்ய முடியும்” என்றார்.
அதாவது, “இந்த இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு ஐநா-வுடன் இணைந்து இந்தச் சவால்களுக்கு தீர்வு காண முடியும். பாலஸ்தீனம் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகள், போராட்டங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை ஆகிய சவால்களுக்கு தீர்வு காண முடியும். மேலும் தகராறுகளை தீர்த்து வைத்தல் மற்றும் ஆக்கபூர்வ தலையீடு செய்தல், அமைதி மற்றும் சமாதான கட்டுமானம், மனிதார்த்த உதவிகள், குறிப்பாக அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்கான உதவிகள், தீவிரவாதம் மற்றும் முரண்பாடுகளின் வேரடி காரணங்கள் ஆகிய விவகாரங்களில் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புடன் ஐநா இணைந்து செயல்படக்கூடிய திறன் கொண்டது” என்றார்.
ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி மூன் இந்திய-பாகிஸ்தான் எல்லைத் தகராறுகள், துப்பாக்கிச் சூடுகள் குறித்து கவலைகளை வெளியிட்ட பிறகு மலீஹா லோதி இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஜ் என்பவரை ஆகஸ்ட் 23-ம் தேதியன்று சந்தித்து பயங்கரவாத, எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட விவகாரங்களை விவாதிக்கவுள்ளனர்.
கடந்த மாதம் ரஷ்யாவின் உஃபாவில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் செயலர் மட்ட சந்திப்பு பற்றி தீர்மானித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT