Published : 09 Jan 2020 01:10 PM
Last Updated : 09 Jan 2020 01:10 PM

ஈரான் 16 ஏவுகணைகளை ஏவியது: இராக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்கா

3 பகுதிகளிலிருந்து 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக இராக்கில் அமெரிக்க ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இந்த நிலையில் இத்தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. நமது ராணுவ வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ராணுவ தளத்தில் மட்டுமே சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது மூன்று பகுதிகளியிலிருந்து 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் எஸ்பர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “ஈரான் ஏவிய 16 ஏவுகணைகளில் 11 மட்டுமே அன் அல் ஆசாத் ராணுவ தளத்தை தாக்கியது. உயிரிழப்புகள், ஆயுதங்களை அழிப்பது மற்றும் கட்டுமானங்களில் சேதம் ஏற்படுத்துவது இதுதான் அவர்களின் இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x