Last Updated : 05 Jan, 2020 06:25 PM

 

Published : 05 Jan 2020 06:25 PM
Last Updated : 05 Jan 2020 06:25 PM

லிபியா நாட்டின் ராணுவப் பள்ளியில் விமானத் தாக்குதல்: 30 பேர் பலி

லிபிய தலைநகர் திரிப்போலியில் இயங்கிவரும் ராணுவப் பள்ளி மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர், 33 பேர் காயமடைந்தனர்.

லிபிய அரசின் ராணுவப் பள்ளி தலைநகரின் குடியிருப்புத் துறையான அல்-ஹட்பா அல்-கத்ராவில் உள்ளது. ராணுவப் பள்ளியின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த பயிற்சிப் படை வீரர்கள் தங்கள் தங்குமிடங்களுக்குச் செல்வதற்கு முன்பு அணிவகுப்பு மைதானத்தில் கூடியிருந்த போது இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக லிபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாக்குதலை நடத்திய ஹப்தார் கிளர்ச்சிப் படையினர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டதாக லிபியாவின் ஜி.என்.ஏ அரசுப் படைகள் குற்றம் சாட்டின. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு ஹப்தார் சார்புப் படைகள் பொறுப்பேற்கவில்லை.

இதுகுறித்து அமீன் அல்-ஹஷேமி தேசிய ஒப்பந்த அரசாங்கத்தின் (ஜி.என்.ஏ) சுகாதார அமைச்சககத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘தலைநகர் திரிப்போலியில் ராணுவப் பள்ளி மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மொத்தம் 30 பேர் கொல்லப்பட்டனர், 33 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள் மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்றார்.

திரிப்போலியின் தெற்குப் பகுதியில், கடந்த ஏப்ரல் முதல், படைபலம் மிக்க கலீஃபா ஹப்தார் ஜி.என்.ஏ அரசுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து கடுமையான சண்டை நடந்து வருகிறது.

2011 நேட்டோ ஆதரவு எழுச்சியில் நீண்டகால சர்வாதிகாரி மோமர் கடாபியைக் கவிழ்த்துக் கொன்றதால் லிபியா குழப்பத்தில் மூழ்கியது. இது நாட்டின் கிழக்கை அடிப்படையாகக் கொண்ட ஜி.என்.ஏ மற்றும் போட்டி அரசாங்கத்திற்கு இடையே பிரிவினையை தூண்டியது.

திரிப்போலி மீது ஹப்தார் தாக்குதல் தொடங்கியதில் இருந்து 280 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் சுமார் 146,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐ.நா.பாதுகாப்புக் குழு கடந்த மாதம் லிபியாவில் போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்புகளை புதுப்பித்து, அந்நாட்டின் மீதான ஆயுதத் தடையை மதிக்குமாறு வெளிநாட்டு அமைப்புகளை வலியுறுத்தியது - ஜோர்டான், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து மீறிவருவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x