

அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஈரான் படைத் தளபதி சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி சுலைமானின் இறுதி ஊர்வலம் இராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் சுலைமான் உடல் கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் அமெரிக்கக் கொடியையும், ட்ரம்ப்பின் படத்தையும் தங்கள் காலில் மிதித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பெண்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.