

சுலைமான் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரான் புரட்சிக்கரப் படைத் தளபதி சுலைமான் கொல்லப்பட்ட விவகாரத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெதன்யாகு தனது ட்விட்டர் பக்கத்தில் , ''தன் நாட்டைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பது போல, அமெரிக்காவுக்கும் உரிமை உள்ளது. அமெரிக்க மக்கள் உட்பட பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு சுலைமான் முக்கியக் காரணமாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.