Published : 04 Jan 2020 12:14 PM
Last Updated : 04 Jan 2020 12:14 PM

சுலைமான் கொல்லப்பட்டது ஈரானுடன் போர் தொடங்குவதற்காக அல்ல: ட்ரம்ப்

மோதல் அதிகரித்து வரும் சூழலில், ஈரானுடன் போர் தொடங்குவதற்காக சுலைமான் கொல்லப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் ராணுவத்தின் மூளையாகச் செயல்பட்ட சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ஈரான் புரட்சிப் படை தளபதி சுலைமான் அமெரிக்காவால் கொல்லப்பட்டது குறித்து ட்ரம்ப் கூறும்போது, " சுலைமான் அமெரிக்காவின் ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால், நாங்கள் அதனைத் தடுத்து நிறுத்தினோம். நாங்கள் போரை நிறுத்துவதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்தோம். இந்த நடவடிக்கை ஈரானுடன் போரைத் தொடங்குவதற்கு எடுக்கப்பட்டதல்ல. ஈரானில் ஆட்சி மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x