Published : 04 Jan 2020 10:55 AM
Last Updated : 04 Jan 2020 10:55 AM
ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் இராக்கில் ஷியா தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் பலியாகினர்.
இதுகுறித்து இராக் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், “இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள வடக்கு மாவட்டமான தஜியில் ஷியா தீவிரவாதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து ஷியா தீவிரவாத அமைப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வருகிறது.
இதற்கிடையில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதியாக இஸ்மாயில் கானி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT