இஸ்மாயில் கானி
இஸ்மாயில் கானி

புரட்சிகர ஈரான் படைக்கு புதிய தளபதி நியமனம்

Published on

குவாசிம் சுலைமான் அமெரிக்காவால் கொல்லப்பட்ட நிலையில், இஸ்மாயில் கானியை ஈரான் புரட்சிப் படையின் தளபதியாக நியமித்து அந்நாட்டின் மூத்த தலைவர் அயத்துல்லா காமெனி உத்தரவிட்டார்.

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் அமெரிக்காவால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துணை தளபதியான இஸ்மாயில் கானி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்த அறிவிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) ஈரானின் மூத்த தலைவர் காமெனி அறிவித்தார்.

இதுகுறித்து காமெனி கூறும்போது, “தியாகி சுலைமானைத் தொடர்ந்து ஈரான் புரட்சிகரப் படையின் படைத் தளபதியாக இஸ்மாயில் கானியை நியமிக்கிறேன்” என்றார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in