Published : 02 Jan 2020 02:50 PM
Last Updated : 02 Jan 2020 02:50 PM

சிரியாவில் பள்ளி மீது தாக்குதல்: குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

சிரியாவில் புத்தாண்டு தினத்தில் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பலியாகினர். பலியானவர்களில் நான்கு பேர் குழந்தைகள்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு ஒன்று கூறும்போது, “சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான இட்லிப்பில் உள்ள பள்ளி ஒன்றில் புத்தாண்டு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலியாயினர். அதில் 4 பேர் குழந்தைகள்” என்று தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடைபெற்றபோது பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இந்தத் தாக்குதலை அரசுப் படைகள் நடத்தி இருக்கலாம் என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள இட்லிப் போன்ற சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x