Published : 31 Dec 2019 04:45 PM
Last Updated : 31 Dec 2019 04:45 PM

நியூஸிலாந்தில் பிறந்தது புத்தாண்டு: பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மக்கள் வரவேற்பு

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டான 2020-ம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் நேரக் கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதல் புத்தாண்டு பிறக்கும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு, நியூசிலாந்தில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது.

உலகிலேயே முதலாவதாகப் புத்தாண்டு கொண்டாடப்படுவது நியூசிலாந்தில்தான். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் ஏழரை மணிநேரம். இந்த இடைவெளி இருப்பதால், நமக்கு மாலை 4.30 மணி ஆகும்போது அவர்களுக்கு நள்ளிரவு 12 மணி தொடங்கி விடும்.

நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்ததையடுத்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடந்தன.

புத்தாண்டு பிறந்ததையொட்டி, நியூசிலாந்தின் ஆக்லாந்து, கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், பார்களில் புத்தாண்டைக் கொண்டாடச் சிறப்பு நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் உற்சாகமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

புத்தாண்டு பிறந்தவுடன் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில் மக்கள், வானவேடிக்கை வெடித்துக் கொண்டாடினர். லேசர் நிகழ்ச்சிகள் மூலம் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

அடுத்த சில மணிநேரங்களில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளதால், அங்குள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x