Published : 31 Dec 2019 11:14 AM
Last Updated : 31 Dec 2019 11:14 AM
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கிடையே தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்கா - தலிபான்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் வன்முறையை ஆப்கானிஸ்தானில் குறைக்க தலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சைபிபுல்லா முஜாஹித் கூறும்போது, ”உண்மையை கூற வேண்டும் என்றால் போரை நிறுத்த தலிபான்கள் விரும்பவில்லை. எனினும் அமெரிக்கா கேட்டுக் கொண்டதன் பேரில் வன்முறைகளை குறைத்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் சம்மதிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோரைத் தொடர்புகொண்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை அமெரிக்கா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT