Published : 30 Dec 2019 10:57 AM
Last Updated : 30 Dec 2019 10:57 AM

பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக கிம் முக்கிய ஆலோசனை

அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக அமெரிக்காவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு விடைபெறவுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று வடகொரிய அதிபர் கிம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக தனது கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தியதாக வடகொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்புப் படைகள் போன்றவற்றின் நடவடிக்கைகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதற்கு தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் கிம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள் நடத்தியதற்காக, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அது முதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோவில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x