Published : 27 Dec 2019 04:12 PM
Last Updated : 27 Dec 2019 04:12 PM
உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது என்று அல் ஜசிரா நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஏமன் உள்நாட்டுப் போர் குறித்து மத்திய கிழக்கு நாடுகளின் பிரபல பத்திரிகையான அல் ஜசிரா சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்திய வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, “தொடர்ந்து ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கு மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றது.
சுமார் 91,000க்கும் அதிகமான மக்கள் ஏமன் போரில் இறந்திருக்கிறார்கள். 30 லட்சம் பேர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
நாட்டின் பல இடங்களில் பஞ்சம் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏமனில் தென் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்தது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.
ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஏமன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சவுதி இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT