Published : 27 Dec 2019 03:20 PM
Last Updated : 27 Dec 2019 03:20 PM

தேச விரோத வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து முஷாரப் மனுதாக்கல்

தேச விரோத வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து முஷாரப் லாகூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசத்துரோக வழக்கில் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் முஷாரப், துபாயில் மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியுள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மருத்துவச் சிகிச்சையைக் காரணமாகக் கூறி முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முஷாரப் ஆதரவாளர்கள் நாட்டின் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அமைச்சர்களும் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்தனர்.

இந்த நிலையில் தூக்குத் தண்டனையை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் முஷாரப் மனுதாக்கல் செய்திருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

86 பக்கங்கள் கொண்ட அந்த மனுவை முஷாரப்பின் வழக்கறிஞர் அசார் சித்திக் தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x