

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பின்ஃபோன் புயல் தாக்கியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பின்ஃபோன் புயல் கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்கியது. மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதில் மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன என்று பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் பின்ஃபோன் புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும், பலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “ பிலிப்பைன்ஸில் பின்ஃபோன் புயல் பாதிப்பு காரணமாக சுமார் 43,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,000க்கும் அதிகாமான வீடுகள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. புயல் இத்தகைய பேரழிவை தரும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை"” என்றார்.
பிலிப்பைன்ஸை இந்த ஆண்டு தாக்கிய 21-வது புயல் பின்ஃபோன் ஆகும்.
பிலிப்பைன்ஸை இம்மாதத் தொடக்கத்தில் கம்முரி புயல், தென் பகுதிகளில் தாக்கியது. இதன் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.