Published : 26 Dec 2019 05:59 PM
Last Updated : 26 Dec 2019 05:59 PM

ஏமனில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் பலி: ஐநா கண்டனம்

ஏமனில் வடக்கில் உள்ள சடா நகரில் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, ''ஏமனின் வடக்கில் சடா நகரில் உள்ள அல் ரக்ஹ் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளனர். இம்மாதத்தில் இப்பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது. இத்தாக்குதலில் பலியானவர்களில் 12 பேர் எத்தியோப்பியாவைச் சேர்ந்த அகதிகள். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வரும் என்று ஐநா கூறியிருந்த நிலையில் ஏமனில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ஏமன் போர்

முன்னதாக, ஏமனில் தென் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்தது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஏமன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சவுதி இறங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x