Published : 23 Dec 2019 03:38 PM
Last Updated : 23 Dec 2019 03:38 PM
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்பாக காலநிலை மாற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் கிரெட்டா கூறிய கருத்தை அந்நாட்டின் பிரதமர் நிராகரித்துவிட்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 8 பேர் பலியாகினர்.
தொடர்ந்து அங்கு காட்டுத் தீயை முழுமையாக அணைக்கும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காலநிலை மாற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க் தன் சமூக வலைதளப் பக்கங்களில், "ஆஸ்திரேலிய காட்டுத் தீ போன்ற பேரழிவுகளுக்கு நாம் அரசியல்ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள், ஆஸ்திரேலிய காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தொடர்புபடுத்த தற்போதும் தவறிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கிரெட்டாவின் இக்கருத்தை ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து மோரிசன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “ஆஸ்திரேலியாவின் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்திரேலிய அரசு கொள்கைகளை அமைக்கும். இதில்தான் எனது கவனம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ஆஸ்திரேலியா என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT