சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல்: 60 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல்: 60 பேர் பலி
Updated on
1 min read

சிரியாவில் பாதுகாப்புப் படை மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிரியாவில் இயங்கும் மனித உரிமை அமைப்பு கூறும்போது, “ சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மாரெட் அல் நுமன் நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 60க்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்ய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தினர்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள இட்லிப் போன்ற சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in