Published : 20 Dec 2019 05:16 PM
Last Updated : 20 Dec 2019 05:16 PM
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் விவரம் பாகிஸ்தானை இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சி என பாகிஸ்தான் சட்ட அமைச்சர் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசத்துரோக வழக்கில் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் முஷாரப், துபாயில் மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியுள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மருத்துவச் சிகிச்சையைக் காரணமாகக் கூறி முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முஷாரப் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் அவர் எவ்வாறு கொல்லப்பட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
167 பக்கங்கள் கொண்ட முஷாரப்புக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு பக்கத்தில், ''நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை தீர்ப்புக்கு முன்னரே முஷாரப் இறந்துவிட்டால், அவரது உடல் இழுத்துச் செல்லப்பட்டு இஸ்லமாபாத்தில் உள்ள சதுக்கத்தில் 3 நாட்கள் துக்கிலிடப்பட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி வாகர் அகமத் சேத் அளித்த தீர்ப்பு அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பாகிஸ்தான் அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவத் பாஜ்வா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்ததாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் நசிம், ''இது வெறுக்கத்தக்க தீர்ப்பு. இம்மாதிரியான தீர்ப்புகள் பாகிஸ்தானை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சி'' என்று விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT