Published : 20 Dec 2019 08:11 AM
Last Updated : 20 Dec 2019 08:11 AM

குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்கா, சீனா ஆதரவு: வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் விவாதிக்க மறுப்பு

வாஷிங்டன்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தியா, அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் (2 2) நிலையிலான 2-வது கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர்கள் மைக் பாம்பியோ, எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மார்க் எஸ்பர், ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர்மைக் பாம்பியோவும் ஜெய்சங்கரும் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, குடியுரிமைதிருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடைபெற்று வருவது குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பாம்பியோ கூறும்போது, “சிறுபான்மையினரையும் மத உரிமையையும் பாதுகாக்க நாங்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நீங்கள் எழுப்பிய பிரச்சினை தொடர்பாக பலமான விவாதம் நடத்தப்பட்டுள்ளதால் இந்திய ஜனநாயகத்தை மதிக்கிறோம்” என்றார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “இந்தியா தொடர்பாக நீங்கள் கேள்வி எழுப்பி உள்ளீர்கள். குறிப்பிட்ட அந்த சட்ட மசோதா தொடர்பான விவாதத்தை நீங்கள் கவனித்திருந்தால், சிலநாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் நலனுக்காகஅந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மத ரீதியாக துன்புறுத்தல் நடந்தநாடுகள் எவை என்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த மதத்தினர் என்பதையும் நீங்கள் பார்க்கவேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க முடிவு செய்தது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தியாஒரு துடிப்பான ஜனநாயக நாடு. மத சுதந்திரம், மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அங்கு பல அமைப்புகள் உள்ளன. அந்த வகையில், அங்கு புதிதாக இயற்றப்பட்ட சட்டம் குறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. எனவே, இந்த நடைமுறைகளை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.

இதுபோல குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்துமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சீன துணைத் தூதரகஅதிகாரி ஜா லியூ செய்தியாளர்களிடம் கூறும்போது, “அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது உங்கள் நாடு. உங்கள் சொந்தப் பிரச்சினைக்கு நீங்கள்தான் தீர்வு காண வேண்டும்” என்றார்.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் சர்வதேச விவகாரத் துறை ஆலோசகர் கவ்ஹர் ரிஸ்வி 2 தினங்களுக்கு முன்பு கூறும்போது, “குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள தயாராக உள்ளோம். ஆனால், இந்தியா அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்” என்றார்.

இதுபோல, இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேசத்தினர் பட்டியலை வழங்குமாறு கோரி உள்ளதாக வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இதுபோல, வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன்நாடுகளும் இந்த சட்டம் குறித்துவிவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் நேற்று கூறும்போது, “அமெரிக்கா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் குறித்துஅந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொண்டார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x