Published : 19 Dec 2019 04:47 PM
Last Updated : 19 Dec 2019 04:47 PM

தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பழி தீர்க்கும் நடவடிக்கை: முஷாரப்

தனிப்பட்ட பழிதீர்க்கும் நடவடிக்கை என தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசத்துரோக வழக்கில் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016 ஆம் ஆண்டு முதல் முஷாரப், துபாயில் மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியுள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மருத்துவச் சிகிச்சையைக் காரணமாகக் கூறி முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் செவ்வாய்க்கிழமை முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முஷாரப் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு வழக்கப்பட்ட தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் துபாயில் மருத்துவமனையில் இருந்து கொண்டு வீடியோ மூலம் பதிலளித்திருக்கிறார்.

இதுகுறித்து துபாய் மருத்துவமனையில் முஷாரப் கூறும்போது, ”இந்த வழக்கு எனக்கு எதிரான சிலரால் பழிதீர்க்கும் நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிரான வழக்குகள் அரசியல் நோக்கம் கொண்டவை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x