Published : 18 Dec 2019 05:39 PM
Last Updated : 18 Dec 2019 05:39 PM

முஷாரப் தீர்ப்பு குறித்து ஆலோசிக்க கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக ஆலோசிப்பதற்காக, அவசரக் கூட்டம் நடத்த தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உலகளாவிய அகதிகள் மன்றம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றிருந்தார். இந்நிலையில் ஜெனிவாவில் தனது பயணத்தைச் சுருக்கிக் கொண்ட இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை குறித்து தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசத்துரோக வழக்கில் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016 ஆம் ஆண்டு முதல் முஷாரப், துபாயில் மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியுள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மருத்துவச் சிகிச்சையைக் காரணமாகக் கூறி முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் செவ்வாய்க்கிழமை முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முஷாரப் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x