Published : 17 Dec 2019 05:21 PM
Last Updated : 17 Dec 2019 05:21 PM
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி இந்த வார இறுதியில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி இவ்வாரம் ஜப்பானுக்கு அரசியல் ரீதியாக தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோ செல்கிறார்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஈரான் தலைவர் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறார் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி.
முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT