Published : 16 Dec 2019 12:39 PM
Last Updated : 16 Dec 2019 12:39 PM

இரண்டு மணிநேரத்தில் 123 ட்வீட்கள்: ட்ரம்ப் சாதனை 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தன் மீது கொண்டுவரப்படவுள்ள பதவி நீக்கத் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் 2 மணிநேரத்தில் 123 ட்வீட்கள் பதிவிட்டு சாதனை படைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், ஜோ பிடனின் மகன் ஹன்டருக்குச் சொந்தமான உக்ரைனில் செயல்படும் நிறுவனம் மீதான ஊழல் புகாரை விசாரிக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதற்காக அந்நாட்டுக்கான ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்ததாகவும், ஜோ பிடனின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட ட்ரம்ப் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையின் (கீழவை) நீதிக் குழு, விசாரணை நடத்தியது. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ட்ரம்ப் மீது கீழவையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், ட்ரம்ப் அடுத்தடுத்து ட்விட்டரில் இதற்க்கு எதிரான தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இரண்டு மணிநேரத்தில் சுமார் 123 பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டார் ட்ரம்ப் (இதில் ட்வீட்கள், ஆர்ட்டிகிள் அடங்கும்) . இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் ட்விட்டரில் அதிக பதிவுகளைப் பதிவிட்ட உலகத் தலைவர் என்ற சாதனையை ட்ரம்ப் படைத்தார். மேலும், தனது முந்தைய சாதனையையும் ட்ரம்ப் முறியடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x