

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “பிலிப்பைன்ஸில் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தாவோ நகரிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக அமைந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 எனப் பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆறு பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும், நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு பல இடங்களில் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள ஐந்தாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும் .
ரிங் ஆஃப் ஃபயர்
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.