Published : 12 Dec 2019 06:41 PM
Last Updated : 12 Dec 2019 06:41 PM
இந்தியாவுக்கு வரவிருந்த அரசியல் ரீதியான பயணத்தை ரத்து செய்வதாக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் மூன்று நாள் பயணமாக இந்தியா வரவிருந்தார். இப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த அவர், இரு நாட்டு உறவு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார்.
இந்நிலையில் சொந்த நாட்டின் தேவை கருதி இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) அப்துல் மோமென் கூறும்போது, “டெல்லியில் நடைபெறவிருந்த புத்திஜிபி தேபோஷ் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. இந்நிலையில் நான் எனது பயணத்தை ரத்து செய்கிறேன். முக்கிய அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுச் செயலாளர் வெளிநாடு சென்று இருப்பதால் சொந்த நாட்டில் எனது தேவை அதிகரித்துள்ளது. எனவே இந்தியப் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மோமன் ஜனவரியில் தனது இந்தியப் பயணத்தை எதிர் நோக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT