Published : 11 Dec 2019 04:50 PM
Last Updated : 11 Dec 2019 04:50 PM

குடியுரிமை திருத்த மசோதா குறித்து நாங்கள் கருத்து கூறத் தேவையில்லை : மாலத்தீவு

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாலத்தீவு கருத்து கூறத் தேவையில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துள்ளார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் குடியுரிமை திருத்த மசோதாவை பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் விமர்சித்துள்ள நிலையில் இதுகுறித்து கருத்து கூறத் தேவையில்லை என்று மாலத்தீவு தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா குறித்த கேள்விக்கு மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் பதிலளிக்கும்போது, “
அவர்கள் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சட்டத்தை உருவாக்குகிறார்கள். அது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம். நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தையே பிரதிபலிக்கிறது. இதில் நாங்கள் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை. இது உள்நாட்டு விவகாரம்” என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x