Published : 09 Dec 2019 06:56 PM
Last Updated : 09 Dec 2019 06:56 PM
வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைக்காக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அந்நாடு ட்ரம்ப்பை விமர்சித்துள்ளது.
முக்கியமான ஏவுகணை சோதனையை வடகொரியா திங்கள்கிழமை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “வடகொரிய அதிபர் கிம் ஜோங் விரோதமான வழியில் செயல்பட்டால் அனைத்தையும் இழப்பீர்கள். வடகொரிய அதிபர் கிம், அமெரிக்காவுடனான உறவை ரத்து செய்ய விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன்” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, வடகொரிய ஆளும் கட்சியின் துணைத் தலைவர் கிம் யோங் ஜோல்
பொறுமையில்லாதவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், வடகொரியாவின் மூத்த அதிகாரிகள் நிலையில்லாத வயதான மனிதர் ட்ரம்ப் என்று விமர்சித்துள்ளனர்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோவில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT