Published : 06 Dec 2019 12:54 PM
Last Updated : 06 Dec 2019 12:54 PM
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது என ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கடிதம் எழுதியுள்ளன.
ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஈரானின் சமீபத்திய செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில் இதுகுறித்துக் கூட்டாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்நாடுகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
அக்கடிதத்தில், “அணு அயுத ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி ஈரான் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதனை ஈரான் மறுத்துள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட 6 ( ஈரான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT