Published : 05 Dec 2019 01:20 PM
Last Updated : 05 Dec 2019 01:20 PM
ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய கிழக்கு பகுதிக்கு படைகள் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது.
ஈரானால் மத்தியக் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக சுமார் 14,000க்கு மேற்பட்ட படை வீரர்களை அங்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இதனை அமெரிக்கா பாதுகாப்புத் துறை மறுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் அலிசா ஃபாரா கூறும்போது, “ நான் தெளிவாக கூறுகிறேன். இது முற்றிலும் தவறான செய்தி. 14,000க்கு மேற்பட்ட அமெரிக்கா படை வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப முடிவெடுக்கவில்லை” என்றார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது.
இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT